சென்னை,
தென் மேற்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை14-ந்தேதி வரை தமிழ்நாட்டில் 115.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழை அளவை விட 48 சதவீதம் கூடுதலாகும். குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில், 664.9 மில்லி மீட்டர் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இது இம்மாவட்டதிற்கான இயல்பான மழை அளவை விட 125 சதவீதம் கூடுதலாகும். மேலும், கடந்த ஒரு வார காலமாக நீலகிரி மாவட்டத்தில் கன மழை முதல் அதி கன மழை பெய்து வருகிறது. கடந்த 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நீலகிரி மாவட்டத்திற்கான இயல்பான மழை அளவு 38.9 மில்லி மீட்டர் என்ற நிலையில், 263.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
உணவு, குடிநீர்
இதன் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில், குடிசைகள், வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. ஒரு சில பகுதிகளில் சிறிய அளவில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீலகிரி மாவட்டத்தில், 22 குடும்பங்களைச் சார்ந்த 102 நபர்கள், 5 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கன மழை ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும், வேளாண், தோட்டக்கலைப் பயிர்களுக்கும், இதர உட்கட்டமைப்புகளுக்கும் ஏற்பட்டுள்ள சேதங்களை ஆய்வு செய்து அவற்றை உடனடியாக சீரமைக்கவும், வனத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரனுடன் இணைந்து பணியாற்ற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனையும், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜியையும், வருவாய் நிர்வாக ஆணையர் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகரையும் நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பி வைத்துள்ளேன்.
தயார்நிலையில் இருக்கிறது
மேலும், நீலகிரி மாவட்டத்தில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 160 வீரர்கள் அடங்கிய 2 குழுக்கள் நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு, அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.
மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், பல்துறை மண்டல குழுக்களும், மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளதோடு, பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் பொக்லைன் எந்திரங்கள், மரம் அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் தொடர்புடைய துறை அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், அமைச்சர்கள் தலைமையிலான குழு அரசு நிர்வாகம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும். பொதுமக்கள், அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்படும் முன்னெச்சரிக்கை செய்திகளை கவனித்து பாதுகாப்புடன் செயல்படுமாறும், மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.