தமிழக செய்திகள்

காமன்வெல்த்: தமிழக வீரர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற பிரவீன் சித்ரவேலுவுக்கு ரூ.30 லட்சமும், வெண்கலம் வென்ற செல்வ பிரபுவுக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

சென்னை,

ஒரே போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என முதல்-அமைச்சர் விஜய் கூறியுள்ளார்.

காமன்வெல்த் 2026 தொடரில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்ந்து வருகிறது. ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இரண்டு பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.

இந்தியாவின் பிரவீன் சித்ரவேல் 16.58 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான செல்வ பிரபு திருமாறன், 16.52 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில்,

ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. பிரவீன் சித்ரவேல் அவர்களுக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. செல்வ பிரபு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும்

பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வீரர்களின் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக, வெள்ளிப் பதக்கம் வென்ற திரு. பிரவீன் சித்ரவேல் அவர்களுக்கு 30 இலட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்ற திரு. செல்வ பிரபு அவர்களுக்கு 20 இலட்சம் ரூபாயும் வழங்கப்படும்.

ஒரே போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இருவீரர்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயின்று, முறையான பயிற்சி பெற்றவர்கள் என்பது தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறைக்குப் பெருமை சேர்ப்பதாகும்.

இவர்களின் கடின உழைப்பும், விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் வெற்றியைத் தேடித்தந்ததோடு,ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை அளிக்கிறது. சர்வதேச அரங்கிலும் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற எனது வாழ்த்துகள் என அதில் பதிவிட்டுள்ளார்.