தமிழக செய்திகள்

சென்னை வேளச்சேரி-பள்ளிக்கரணை சாலையில் பள்ளி பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

பேருந்தில் மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சென்னை,

சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று வழக்கம்போல் பள்ளி முடிந்ததும் மாணவர்களை பள்ளி பேருந்தில் ஏற்றி அவர்களது வீடுகளில் இறக்கிவிட்டு, மீண்டும் அந்த பேருந்தை பள்ளிக்கு கொண்டு செல்வதற்காக வேளச்சேரி-பள்ளிக்கரணை சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென பேருந்தின் முன்பக்கத்தில் புகை வந்தததால் உடனடியாக அவர் பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். இதையடுத்து ஒரு சில வினாடிகளில் பேருந்து தீப்பற்றி எரியத்தொடங்கியது. பேருந்தில் மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், பேருந்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

இருப்பினும் இந்த சம்பவத்தில் வாகனம் முழுவதுமாக தீயில் எரிந்து சேதமடைந்தது. அதே சமயம், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. மின்சார கசிவினால் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் சுமார் ஒன்றரை மணி நேரமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.