சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு (எம்.எல்.) விடுதலை கட்சியின் மாநில செயலாளர் ஆசைத்தம்பி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேகதாது அணை கட்டும் திட்டம் குறித்த புதிய விரிவான திட்ட அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என கர்நாடக மாநில அரசின் துணை முதல்-மந்திரி டி. கே. சிவகுமார் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
காவிரி நதிநீர் பங்கீடு, நடுவர் மன்றம், சுப்ரீம் கோர்ட்டு ஆகியவற்றின் இறுதித் தீர்ப்புக்கு எதிராக தொடர்ந்து பேசியும், செயல்பட்டும் வருகிற கர்நாடக அரசையும், தமிழ்நாட்டின் தண்ணீர் உரிமையை பாதுகாப்பதில் அலட்சியம் காட்டி, வஞ்சித்து வரும் மத்திய பா.ஜனதா அரசையும் கண்டித்து, மேகதாது அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வருகிற 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை தஞ்சாவூரில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.