தமிழக செய்திகள்

வீடு கட்ட இலவசமாக மணல் கேட்ட புகார்: நெல்லையில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பணி இடைநீக்கம்

வீடு கட்ட இலவசமாக மணல் கேட்ட புகார் தொடர்பாக, சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் என 2 பேரை பணி இடைநீக்கம் செய்து திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசன்னகுமார் அதிரடி உத்தரவிட்டார்.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரராஜன். இவர் பாலாமடை பகுதியில் கிரஷர், எம்.சாண்ட் மணல் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் 2 பேர் அந்த நிறுவனத்திற்கு சென்று, வீடு கட்டுவதற்கு இலவசமாக மணல் வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சுந்தரராஜன் நெல்லை மாவட்ட எஸ்.பி. பிரசன்னகுமாரிடம் புகார் தெரிவித்தார். அந்த புகாரில், தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீஸ்காரர் பாலசுப்பிரமணியன் ஆகிய 2 பேரும் கிரஷருக்கு வந்து எம்.சாண்ட் மணல் இலவசமாக தரவேண்டும் என்று கேட்டனர். ஆனால் நான் மணல் கொடுக்க மறுத்ததால் என்னை மிரட்டிவிட்டு சென்றனர்' என்று அவர் கூறி இருந்தார்.

இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் உள்பட மேற்சொன்ன 2 பேரையும் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசன்னகுமார் அதிரடி நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டார்.

வீடு கட்டுவதற்கு இலவசமாக மணல் கேட்டதாக வந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.