சென்னை,
டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 9 பேர் பலியாகியுள்ளனர். 16 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் வருகின்றனர்.
இந்த நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்லும்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தமிழக சுகாதாரத் துறைக்கு புகார்கள் வந்தன.
அதாவது, சில தனியார் மருத்துவமனைகளில், டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு சாதாரண சிகிச்சைக்கு ரூ.22 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையும், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தால் ரூ.75 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால், துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளது. மேலும், இதுபோன்ற புகார்களுக்கு 104 என்ற எண்ணை தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.