தமிழக செய்திகள்

போலீசார் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்.. செல்போன் எண்கள் வெளியீடு

பொதுமக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் புகார்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

போலீசார் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க தனிப்பிரிவை தொடங்கி டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

தனிப்பிரிவு

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-

எனது அறிவுறுத்தலின்படி, தமிழக காவல்துறையின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர கமிஷனரகங்களிலும் 'உள்நாட்டு விஜிலென்ஸ் குழுக்கள்' (அதாவது லஞ்சஒழிப்பு குழுக்கள்) அமைக்கப்பட்டுள்ளன. போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்களுக்கு எதிரான ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பிற ஒழுங்கீனமான செயல்களை தடுப்பது, கண்காணிப்பது மற்றும் இதுதொடர்பான புகார்களை விசாரணை செய்வது இந்த குழுக்களின் முக்கிய நோக்கமாகும்.

' செல்போன், 'வாட்ஸ்அப்' எண்கள்

இதுபோன்ற புகார்களை பொதுமக்கள் எளிதில் தெரிவிக்கும் வகையில், மாவட்டம் மற்றும் மாநகரம் வாரியாக 'உள்நாட்டு விஜிலென்ஸ் குழுக்களுக்கு' செல்போன் மற்றும் 'வாட்ஸ்அப்' எண்கள் கீழ்க்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி தங்களது முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ரகசியம்

புகார்தாரர்கள் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் அவர்களது அடையாளங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். புகார் அளித்ததற்காக எந்தவொரு புகார்தாரரும் எவ்வித துன்புறுத்தல், அச்சுறுத்தல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படமாட்டார்கள் என்று புகார்தாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு 'உள்நாட்டு விஜிலென்ஸ் குழுக்கள்' உறுதியளிக்கிறது.

பெறப்படும் அனைத்து புகார்களும் நியாயமான, பாரபட்சமற்ற மற்றும் உரிய காலக்கெடுவுக்குள் விசாரிக்கப்பட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

கண்காணிப்பு

'உள்நாட்டு விஜிலென்ஸ் குழுக்களின்' செயல்பாடுகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், சரக டி.ஐ.ஜி.க்கள், மண்டல ஐ.ஜி.க்கள் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர்கள், கூடுதல் டி.ஜி.பி.க்கள் ஆகியோரால் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

என்னுடைய நேரடி கண்காணிப்பும் இந்த குழுக்கள் மீது இருக்கும். பொதுமக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் புகார்களை தெரிவிக்கலாம்.

செல்போன் எண்கள்

செல்போன் மற்றும் வாட்ஸ்அப் எண்கள் விவரம் வருமாறு:-

1. சென்னை கமிஷனரகம் - 7871723000

2.தாம்பரம் கமிஷனரகம் - 6374514428

3. ஆவடி கமிஷனரகம் - 9840018110

4. காஞ்சிபுரம் மாவட்டம் - 9940031700

5. செங்கல்பட்டு - 9500779100

6. திருவள்ளூர் - 9498181359

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.