தமிழக செய்திகள்

5 தனியார் பஸ்களில் ஏர்ஹாரன் பறிமுதல்

பழனியில் 5 தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டு இருந்த ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பழனி பகுதியில் இயக்கப்படுகிற சில தனியார் பஸ்களில் தடை செய்யப்பட்ட ஏர்ஹாரன் பொருத்தி, அதிக ஒலி எழுப்புவதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு புகார் வந்தது. இதனையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயகவுரி, மோட்டார் வாகன ஆய்வாளர் ஸ்ரீதரன் ஆகியோர் பழனி பஸ்நிலையத்துக்கு வந்து அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பஸ்களில் சோதனை செய்தனர். அப்போது 5 தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டு இருந்த ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த டிரைவர்களிடம் வரும் நாட்களில் ஏர்ஹாரன்களை பொருத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து போக்குவரத்து அலுவலர் ஜெயகவுரி கூறும்போது, பழனி வட்டார பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்தில் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 3 ஆட்டோக்கள், உரிமம் புதுப்பிக்காத 2 தனியார் பள்ளி வேன்கள், அதிக பாரம் ஏற்றி சென்ற 11 லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்றார்.