தமிழக செய்திகள்

சொத்து விவகாரத்தால் மோதல்; அன்னையர் தினத்தில் தாய், சகோதரனை சுட்டுக்கொன்ற வாலிபர்

குடும்ப சொத்தாக இருந்த நிலத்தை ராஜ்கிஷோருக்கு தெரியாமல் அவரது தந்தை விற்றுள்ளார்.

லக்னோ,

உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உத்தர பிரதேச மாநிலம் பண்டா பகுதியை சேர்ந்த வாலிபர் ராஜ்கிஷோர் குப்தா என்பவர், தனது தாயை இன்று சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்கிஷோர் குப்தாவின் குடும்ப சொத்தாக இருந்த நிலம் ஒன்றை, ராஜ்கிஷோருக்கு தெரியாமல் அவரது தந்தை விற்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தெரியவந்ததும், ஆத்திரத்தில் ராஜ்கிஷோர் இன்று தனது வீட்டிற்கு சென்று தாய் மற்றும் இளைய சகோதரனிடம் சண்டையிட்டுள்ளார்.

அப்போது திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து தாய் மற்றும் தம்பியை நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், படுகாயமடைந்த ராஜ்கிஷோரின் தாய் மற்றும் சகோதரனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ராஜ்கிஷோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.