தமிழக செய்திகள்

காங்கிரஸ் கூட்டணி முறிவு: நாடாளுமன்றத்தில் இருக்கைகளை மாற்றி தர வேண்டும் - கனிமொழி கடிதம்

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அருகிலேயே திமுக உறுப்பினர்கள் அமர்வது இனி பொருத்தமாக இருக்காது என கனிமொழி கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களுக்குத் தனியாக இருக்கை வசதி ஒதுக்கித் தர வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் உடனான கூட்டணி முடிவுக்கு வந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அருகிலேயே திமுக உறுப்பினர்கள் அமர்வது இனி பொருத்தமாக இருக்காது என்று அக்கடிதத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல்களைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் அவசியமாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள திமுக, இனி வரும் காலங்களில் தனது கருத்துக்களைச் சுதந்திரமாகவும், தனித்துவமாகவும் முன்வைக்க விரும்புகிறது. திமுக உறுப்பினர்கள் தங்கள் நாடாளுமன்ற பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றவும், தங்குதடையின்றிச் செயல்படவும் ஏதுவாகத் தனி இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.