தூத்துக்குடி,
தூத்துக்குடியில் காங்கிரஸ் நிர்வாகியின் கார் உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு வடக்கு மாவட்டத் தலைவர் பெருமாள்சாமி கதில்வேல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி கக்கன்ஜி நகரில் வசித்து வருபவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமுவேல் ஞானதுரை. இவரது வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை, நேற்று இரவு அங்கே வந்த மர்ம நபர்கள் சிலர் கொடூரமாக அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவர் சாமுவேல் ஞானதுரை வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவருடைய நான்கு சக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து இருக்கிறார்கள். இது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக நடைபெற்றதா அல்லது வேறு ஏதும் காரணமா என்பதை காவல்துறை கண்டுபிடித்து, குற்றம் செய்தவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.எம்.சகாயராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காங்கிரஸ் நிர்வாகியின் கார் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இத்தகைய வன்முறை குற்றச் செயலில் ஈடுபட்ட நபர்களை காவல் துறையினர் உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், வன்முறையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு முதல்-அமைச்சரிடம் நேரடியாக புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்" அவர் தெரிவித்துள்ளார்.