சென்னை,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட இரு மாநில காங்கிரஸ் கூட்டத்தை ராகுல் காந்தி முன்னிலையில் கூட்ட தமிழ்நாடு முதலமைச்சர் முயற்சிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசில் பங்கேற்கும் காங்கிரஸ் அமைச்சர்களுடன், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்கட்சித் தலைவர்,ராகுல் காந்தி ஆகியோரிடம், கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமாரிடம் மேகதாது அணை குறித்து பேசி, தமிழகத்திற்கு தொடர்ந்து காவேரி மேலாண்மை ஆணையம் கூறியபடி தண்ணீர் வழங்கவும், மேகதாது அணை திட்டத்தை கைவிடவும் பேசி முடிவெடுக்க, இரு மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்ட முயற்சிக்க வேண்டும்.
காவிரி ஆறு 14 மாவட்டங்களின் பாசன ஆதாரமாகவும், சென்னை உள்ளிட்ட 30 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால் 14 மாவட்டங்களின் வேளாண்மையும், ஏறத்தாழ 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும் என்பதால் இதனை தமிழக அரசு எதிர்த்து வருகிறது.
தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என்று காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதை உச்சநீதிமன்றமும் பலமுறை உறுதி செய்துள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி அளிப்பது குறித்து பரிந்துரைக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள ஆணையம் 2019-ம் ஆண்டு கேட்டுக் கொண்டது. இதற்கு உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்க தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தி.மு.க. அரசு மெத்தனம் காட்டியதால், மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்க தடையில்லை என்று கடந்த நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேகதாது அணை கட்டுவதை எதிர்க்க தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கியிருப்பதாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் கூறுவது அப்பட்டமான பொய்யாகும். இது தொடர்பான வழக்கில் கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மேகதாது அணை திட்டத்தை தமிழகம் எதிர்க்கக் கூடாது என்று கூறவே இல்லை. மாறாக, மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கப்படும் போது, தமிழ்நாடு அரசு அதன் எதிர்ப்பை பதிவு செய்யலாம் என்றும், அதையும் கருத்தில் கொண்டுதான் முடிவெடுக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவாகக் கூறியுள்ளது.
இந்நிலையில் அண்மையில் டெல்லியில் கர்நாடக முதல்-மந்திரி சிவகுமார் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை நேரில் சந்தித்து மேகதாது அணை திட்டத்திற்கு விரைவான அனுமதி (Detailed Project Report - DPR) கோரி மனு வழங்கியுள்ளார்.
அம்மனுவில், தமிழ்நாடு அரசு மேகதாது அணைக்கு எதிராக தொடர்ந்த வழக்குகள் மற்றும் மறுஆய்வு மனு (Review Petition) ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. எனவே சட்ட ரீதியான தடைகள் இல்லை. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் மத்திய நீர் ஆணையம் (CEA) ஆகியவை திட்டத்தின் மதிப்பீடுகளை ஆய்வு செய்து வருகின்றன. விரிவான இறுதி அனுமதி (DPR Approval) உடனடியாக வழங்க வேண்டும். அணை கட்ட அனுமதி கிடைத்தவுடன் பூமி பூஜை நடத்தி பணிகளைத் தொடங்கத் தயாராக இருப்பதாகக் கூறப்பட்டதாக தெரிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு முதல்-அமைச்சர் மேகதாது அணை குறித்து பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சரிடம் எந்த கோரிக்கை மனுவையும் அளித்ததாக செய்திகள் வெளியாகவில்லை.
ஆளும் கர்நாடக காங்கிரஸ் அரசை, காவிரி விவகாரத்தில் இரு மாநில மக்களின் நலன்களையும் உள்ளடக்கியது என்பதால் ஒரு சார்பாக நடந்துகொள்ளக் கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை கர்நாடக காங்கிரஸுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை நேரில் சந்தித்தபோது மேகதாது அணை குறித்து தமிழக மக்களின் கோரிக்கையை வைத்ததாக அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளியாகவில்லை.
எனவே அரசில் பங்கேற்கும் காங்கிரஸ் அமைச்சர்களுடன், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்கட்சித் தலைவர், ராகுல் காந்தி ஆகியோரிடம், கர்நாடக முதல்-மந்திரியிடம் மேகதாது அணை குறித்து பேசி, தமிழகத்திற்கு தொடர்ந்து காவேரி மேலாண்மை ஆணையம் கூறியபடி தண்ணீர் வழங்கவும், மேகதாது அணை திட்டத்தை கைவிடவும் பேசி முடிவெடுக்க, இரு மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்ட முயற்சிக்குமாறு வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.