சென்னை,
பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தியா?, விஜய்யா? என்ற விஷயத்தில் காங்கிரஸ் - த.வெ.க. கூட்டணியில் மோதல் வெடித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க.வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேவை 118 ஆக இருக்க, அக்கட்சிக்கு 107 இடங்களே கிடைத்தன. இதனால், காங்கிரஸ் (5), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.
தமிழகத்தில் 'மைனாரிட்டி' அரசாக த.வெ.க. இருந்து வரும் நிலையில், ஆட்சிக்கு எப்போதும் ஆபத்து வரலாம் என்ற நிலையே தொடர்கிறது. குறிப்பாக, அமைச்சரவையில் பங்குபெறாத இரு கம்யூனிஸ்டு கட்சிகளால், எப்போது வேண்டுமானாலும் த.வெ.க. அரசு ஆட்டம் காணலாம் என்ற நிலையே இருக்கிறது.
சூழ்நிலை இவ்வாறு இருக்க, த.வெ.க. அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ஜெகதீஸ்வரி, ஸ்ரீநாத் உள்ளிட்டோர், நாட்டின் அடுத்த பிரதமர் விஜய் என்ற அளவில் பேசிவருகின்றனர். இது கூட்டணியில் உள்ள தேசிய கட்சியான காங்கிரஸ் நிர்வாகிகளை கொதிப்படைய செய்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி., "பிரதமர் வேட்பாளர் தொடர்பாக த.வெ.க.வினர் வெளியிடும் கருத்துகள் ரசிகர் மன்ற மனநிலையிலேயே உள்ளது. 'இந்தியா' கூட்டணியில் தற்போது 23 கட்சிகள் உள்ளன. த.வெ.க.வுக்கு எம்.பி.க்கள் இல்லை. எனவே, அவர்களுக்கு எம்.பி.க்கள் கிடைத்ததும் 'இந்தியா' கூட்டணியில் இணைக்கப்படுவர். த.வெ.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை என்றால், மத்திய மந்திரி அமித்ஷா கதையை முடித்திருப்பார். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராகி இருப்பார்" என்று கூறியிருக்கிறார்.
இதன் மூலம் காங்கிரஸ் - த.வெ.க. கூட்டணியில் மோதல் போக்கு ஆரம்பித்துவிட்டது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் இருக்கின்றன. தற்போதைய நிலையில் த.வெ.க.வுக்கு ஒரு எம்.பி. கூட கிடையாது. நிலைமை இவ்வாறு இருக்க, இப்போதே ஏன் பிரதமர் வேட்பாளர் குறித்த பேச்சு தேவையா? என்ற கேள்வி எழுகிறது.
அரசியலில் தற்போதைய நிலையில் த.வெ.க. ஒரு குழந்தை. 2½ வயதுதான் ஆகிறது. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து 100 நாட்களை இப்போதுதான் கடந்திருக்கிறது. இன்னும் பயணிக்க வேண்டியது வெகுதூரம் உள்ளது. தமிழகத்திலேயே இன்னும் சரியாக கால் ஊன்றவில்லை. அப்படி இருக்கும்போது, தேசிய அரசியலை இப்போதே த.வெ.க. முன்னெடுப்பது தேவையில்லாதது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, பா.ஜ.க.வுக்கு பிரதமர் வேட்பாளர் தேவையாக இருந்தது. அந்த நேரத்தில், குஜராத் மாநிலத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து வந்த முதல்-மந்திரி நரேந்திரமோடியை நாடே அறிந்து இருந்ததால், அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
தேர்தலில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தொடர்ந்து, 3-வது முறை பிரதமராக நரேந்திரமோடி இருந்து வருகிறார். பா.ஜ.க.வுக்கு மாற்றாக இருந்து வரும் காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் 23 கட்சிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இருந்து த.வெ.க.வும் அந்தக் கூட்டணியில் இணைந்தால், நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளில் போட்டியிட முடியும்.
நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் த.வெ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும். அவ்வாறு நடந்தால்தான், அந்தக் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் குறித்த பேச்சுக்கே தேவை ஏற்படும். அதுவும், ராகுல்காந்தி ஏற்கனவே முன்னிறுத்தப்பட்டுள்ள நிலையில், விஜய்யை த.வெ.க. அமைச்சர்கள் முன்மொழிந்து வருவது தற்போதைக்கு தேவையில்லாதது.
தேசிய அரசியலை த.வெ.க. இப்போதே முன்னெடுத்தால், இன்னும் கடந்து செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. முதலில், தமிழகத்தில் வலுவாக கால் ஊன்ற வேண்டும். நல்லாட்சியை இங்கு கொடுத்தால் தான், த.வெ.க. புகழ் நாடு முழுவதும் பரவும்.
அடுத்தக்கட்டமாக, த.வெ.க.வை அண்டை மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். கேரளம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் விஜய்க்கு ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. இந்த மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி, அதில் வெற்றி பெற்றால்தான், த.வெ.க.வால் அங்கு கால் ஊன்ற முடியும். இவை எல்லாம் ஒரே நாளில் நடந்துவிடாது.
எனவே, முதலில் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் த.வெ.க. கவனம் செலுத்தி, மொத்தம் உள்ள 7 இடங்களில் வெற்றி பெற்றாகவேண்டும். அவ்வாறு வெற்றி பெற்றாலும், பெரும்பான்மைக்கு 4 தொகுதிகள் குறைவாகத்தான் இருக்கும்.
எனவே, தேவையில்லாமல் இப்போது தேசிய அரசியலை பேசி கூட்டணிக்குள் குதர்க்கத்தை ஏற்படுத்துவது த.வெ.க.வுக்குத்தான் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.