தமிழக செய்திகள்

பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்ய பரிசீலனை: மத்திய ஜவுளித்துறை கமிஷனர் தகவல்

ஜவுளித்துறை தற்போதைய சூழலில் சிரமமான நிலையில் இருப்பதாக தொழில் முனைவோர்கள் கூறினர்.

கோவை,

ஜவுளி தொழிலில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதித்து முடிவு எடுப்பதற்கான கருத்தரங்கு, கோவையில் நடைபெற்றது. ஜவுளித்துறை சார்ந்த அனைத்து சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மத்திய ஜவுளித்துறை கமிஷனர் விருந்தா மனோகர் தேசாய் தலைமை தாங்கினார்.

கருத்தரங்கில், ஜவுளித்துறை தற்போதைய சூழலில் சிரமமான நிலையில் இருப்பதாக தொழில் முனைவோர்கள் கூறினர். குறிப்பாக பருத்தி விலை நிலையில்லாமல் இருப்பது, 11 சதவீத இறக்குமதி வரியால் உள்ள பாதிப்பு, மின்சார கட்டணம், மூலப் பொருள் தட்டுப்பாடு குறித்து எடுத்து கூறினார்கள்.

பின்னர் விருந்தா மனோகர் தேசாய் கூறியதாவது:-

பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் அல்லது பருத்தி தட்டுப்பாடு நிலவும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையாவது வரியின்றி பருத்தியை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என ஜவுளித்துறை ஆணையர் அலுவலகம் சார்பில் மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. இறக்குமதி வரியை ரத்து செய்வது பரிசீலனையில் உள்ளது.

சீனா போன்ற நாடுகளில் இருந்து குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்படும் துணிகளால் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படுவதை தடுக்க குறிப்பிட்ட ரக துணிகளுக்குக் கூடுதல் வரி விதிக்கவும் அரசுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.