தமிழக செய்திகள்

ஊத்துக்கோட்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த பரிசீலனை: அமைச்சர் கே.என். நேரு

கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் மூலம் மீஞ்சூர் பகுதியில் விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கே.என். நேரு கூறினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் இன்றைய கேள்வி நேரத்தில், கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட, ஊத்துக்கோட்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா? என சட்டசபை உறுப்பினர் கோவிந்தராஜன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, ஊத்துக்கோட்டையை நகராட்சியாக்கும் கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும், பேரூராட்சிகளின் அருகில் உள்ள ஊராட்சி பகுதிகளை இணைத்து பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து குழு அமைத்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும், ஊராட்சிகளை நகர்ப்புற அமைப்புகளோடு சேர்த்தால் 100 நாள் வேலைத்திட்டம் நின்று விடும் என்று ஊராட்சிகளை சார்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஊராட்சிகளை பேரூராட்சிகளோடு இணைத்து நகராட்சிகளாக தரம் உயர்த்தும் பணியை தற்போது நிறுத்தி வைத்துள்ளதாகவும், மிக அவசியமான கோரிக்கையை மட்டும் பரிசீலித்து வருகிறோம் என்றும் கூறினார்.

அதேபோல், மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் 100 எம்.எல்.டி குடிநீர் வழங்க வேண்டிய இடத்தில் ஒப்பந்ததாரர் 20 முதல் 30 எம்.எல்.டி குடிநீர் மட்டுமே வழங்கியதாகவும், இப்போது அரசே அதனை ஏற்றுள்ள நிலையில், விரைவில் மீஞ்சூர் பகுதியில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT