தமிழக செய்திகள்

தொகுதி மறுவரையறை எதிர்ப்பால் தமிழகத்திற்கு எம்பி இடங்கள் குறைய வாய்ப்பு: எடப்பாடி பழனிசாமி

1998-ல் ஜெயலலிதா கொண்டு வந்த நோக்கத்தை 'இந்தியா' கூட்டணி சிதைத்துவிட்டதக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”தமிழ்நாடு தனது அரசியல் அதிகாரத்தை அதிகரிப்பதற்கும், தனக்குரிய பங்கான மேலும் 20 நாடாளுமன்ற உறுப்பினர் இடங்களைப் பெறுவதற்கும் கிடைத்த வாய்ப்பை இழந்துவிட்டது.

பிரதமர் மோடியால் வழங்கப்பட்ட பொன்னான வாய்ப்பை நாம் இழந்துவிட்டது மட்டுமல்ல. 50% கூடுதல் இடங்களைப் பெற வாய்ப்பிருந்தது. ஆனால் அந்த வாய்ப்பின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளாமல், மு.க.ஸ்டாலின் அதை கண்மூடித்தனமாக எதிர்த்தார்.

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டிருந்தால், நாம் 9 நாடாளுமன்ற உறுப்பினர் இடங்களை இழந்திருப்போம். இந்த மசோதாவிற்கு நீங்கள் காட்டிய அறிவற்ற எதிர்ப்பின் காரணமாக, இப்போது தொகுதி மறுவரையறை 2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் செய்யப்படும். மேலும் நாம் இன்னும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர் இடங்களை இழப்போம்.

மேலும், 1998-ல், ஜெயலலிதா, அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் தலைமையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்தார். அப்போது இந்தியக் கூட்டணிக் கட்சிகள் அந்த மசோதா நிறைவேறாமல் பார்த்துக் கொண்டன. இம்முறை, மசோதாவை எதிர்த்துள்ளீர்கள். மேலும், தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலுமுள்ள பெண்களுக்கும் மிகப்பெரிய அநீதியை இழைத்துள்ளீர்கள்.

நீங்கள் எதைக் கொண்டாடுகிறீர்கள்? தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நீங்கள் ஏற்படுத்திய சேதத்தையா அல்லது பெண்கள் அதிகாரமளித்தலுக்கான மாபெரும் வாய்ப்பை நீங்கள் பாழாக்கியதையா?”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.