தமிழக செய்திகள்

வருகையில்லா ஆவணப்பதிவு: 23-ம் தேதி சந்தேகங்களைத் தீர்க்கும் கலந்தாய்வுக் கூட்டம்

வரும் 17/08/2026 முதல் கட்டாயமாக "வருகையில்லா ஆவணப்பதிவு" முறையில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை,

வருகையில்லா ஆவணப்பதிவு: சந்தேகங்களைத் தீர்க்கும் கலந்தாய்வுக் கூட்டம் 23-ம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக பத்திரப்பதிவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

வருகையில்லா ஆவணப்பதிவு

தமிழ்நாடு பத்திரப் பதிவுத் துறையில் வெளிப்படைத்தன்மையையும், பொதுமக்களின் வசதியையும் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மனைப் பிரிவுகளின் முதல் விற்பனையை, வரும் 17/08/2026 முதல் கட்டாயமாக "வருகையில்லா ஆவணப்பதிவு" முறையில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மற்ற ஆவணப் பதிவுகளும் இந்த முறையின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன.

செயல் விளக்க காட்சி

இந்த புதிய நடைமுறை குறித்து கட்டட விற்பனையாளர்கள், வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கவும். வருகையில்லா பதிவு முறையை செயல் விளக்க காட்சி மூலம் விளக்கவும் மாபெரும் பயிற்சி மற்றும் ஆலோசனைக்கூட்டம் வரும் 23.07.2026 அன்று காலை 10.00க்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சரின் தலைமையில் அம்மா மாளிகை, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒத்துழைப்பு

எனவே. கட்டட விற்பனையாளர்கள். இந்திய கட்டுமான கூட்டமைப்பின் இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (CREDAI), வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் சந்தேகங்களை தீர்த்து கொள்ளுமாறும், தங்களது கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கி இத்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்த தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நிறுவனங்கள் மற்றும் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் 8300828865 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.