சென்னை,
மதுரை மேலூரை சேர்ந்த மணி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சட்டமன்றம், மக்களவை தேர்தல்களில் சில வேட்பாளர்கள் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இரு தொகுதிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில், ஒரு தொகுதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. அதனால் அரசுக்கு செலவு ஏற்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதனால், இரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களிடம், ராஜினாமா செய்யும் தொகுதியின் தேர்தல் செலவுகளை ஏற்க வேண்டும் என உத்தரவாத பத்திரம் பெற வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
இந்த மனு, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வேட்பாளர்கள் இரு தொகுதிகளில் போட்டியிட சட்டம் அனுமதியளிக்கிறது. இந்த சட்டப்பிரிவை எதிர்த்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளதைச் சுட்டிக்காட்டி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.