தென்காசி,
தென்மேற்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. எனவே, பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இன்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதால், குற்றாலம் அருவிகளில் இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அருவிகளுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மெயின் அருவியில் பராமரிப்பு பணி காரணமாக முன்னதாகவே குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.