நெல்லை,
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான பாபநாசம், மணிமுத்தாறு, மாஞ்சோலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
156 அடியுடைய சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 27.20 அடி உயர்ந்து 103.97 அடியை எட்டியுள்ளது. 143 அடியுடைய பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 9.90 அடி உயர்ந்து 73.30 அடியை எட்டியுள்ளது. கொடுமுடியாறு, கடனாநிதி, கருப்பாநதி, அடவிநயினார் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இதைப்போல் 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை நிரம்பி வழிகிறது. இதனால் அணைக்கு வருகின்ற 120 கன அடி தண்ணீரும் அப்படியே திறந்து விடப்படுகிறது. தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால், குடிநீர் தேவை பூர்த்தியடைவதுடன் விவசாயப் பணிகளும் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.