தமிழக செய்திகள்

வாக்குச்சாவடி மையங்களை கண்காணிக்க சென்னையில் கட்டுப்பாட்டு அறை - தொலைபேசி மூலம் புகார்களை பெற ஏற்பாடு

1950 என்ற இலவச தொலைபேசி எண் மூலம் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதே சமயம், சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தால், 1950 என்ற இலவச தொலைபேசி எண் மூலம் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்குச்சாவடி மையங்களை நேரடி இணைய ஒளிபரப்பு வசதி மூலம் சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து தலைமை தேர்தல் அதிகாரி கண்காணிக்க உள்ளார். இதற்காக 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேமராக்கள் வாக்குச்சாவடி மையங்களில் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.