சென்னை,
பா.ஜனதா மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பரந்தூரில் விமான நிலையத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் ஓடுதளம் அமைக்க முடியாது என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறி உள்ளது உண்மைக்கு மாறானது, தவறானது என்பதோடு தமிழ்நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் உள்நோக்கம் கொண்டது. முந்தைய தி.மு.க. அரசு தான் சென்னையின் 2-வது விமான நிலையத்துக்கு பரந்தூரை தேர்வு செய்ததோடு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை விமான நிலைய திட்டத்துக்காக கையகப்படுத்தி முன்னெடுத்தது.
தமிழக அரசு தான் இந்திய விமான நிலைய ஆணையத்திடம், விமான நிலையம் அமைக்க பரந்தூர் பொருத்தமான இடம் என்பதற்கான விரிவான ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது. இரட்டை ஓடுதளங்களுக்கு ஏற்ற வகையில் அதன் திசையமைவு அமைந்திருப்பதை உறுதி செய்து ஆவணங்களை வழங்கியது.
இப்போது அதே ஓடுதளத்தை சாத்தியமற்றது என்று அமைச்சர் நிர்மல்குமார் சொல்வது தொழில்நுட்ப பிரச்சினையால் அல்ல. மலிவான ஓட்டு வங்கி அரசியலால் தான். அமைச்சரின் இந்த பேச்சு உள்நோக்கம் கொண்டது. மாநில வளர்ச்சியைவிட த.வெ.க.வின் வளர்ச்சி தான் முக்கியம் என்ற நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. அமைச்சர் நிர்மல்குமாரின் இந்த தவறான தகவலை, நாடகத்தை, உள் நோக்கத்தை தமிழக பா.ஜனதா வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.