கடந்த 2020ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்து ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழழகன் (வயது 61) என்பவரை ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு குறித்து போலீசார் புலன் விசாரணை செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முருகன் நேற்று தமிழழகன் என்பவரை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும், பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் மேற்சொன்ன தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த மணியாச்சி உட்கோட்ட டி.எஸ்.பி. அஜுகுமார், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியம்மாள், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் அஜித் ரெக்ஸ்டன் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. மதன் பாராட்டினார்.