தமிழக செய்திகள்

சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்

விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகக்கடுமையாக பாதிக்கும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

நாடு முழுவதும் வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. சென்னையில் இதுவரை ரூ.868.50 ஆக இருந்த எரிவாயு உருளையின் விலை இப்போது ரூ.928 ஆக அதிகரித்திருக்கிறது.

வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை உயர்த்தப்பட்டிருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகக்கடுமையாக பாதிக்கும். வளைகுடா போர் தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

வளைகுடா போரின் தாக்கம் நீண்ட காலத்திற்கு இருக்காது; விரைவாக இயல்பு நிலை திரும்பி விடும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ள நிலையில், தற்காலிகமாக இந்த விலை உயர்வு சுமையை மக்கள் மீது சுமத்தாமல் எண்ணெய் நிறுவனங்களே தாங்கிக் கொள்ள வேண்டும். மக்களை பாதிக்கக்கூடிய சமையல் எரிவாயு விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.