தமிழக செய்திகள்

குன்னூர்: குடியிருப்பு பகுதியில் கரடி உலா

கரடிகள் உணவு, குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் உலா வருவது வாடிக்கையாகி விட்டது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது தென் மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் ஆறுகள், அணைகள் போன்ற நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் கரடிகள் உணவு, குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் உலா வருவது வாடிக்கையாகி விட்டது.

இந்தநிலையில் குன்னூர் பகுதியில் சந்திரா காலனி, கரிமரா ஹட்டி பகுதிகளில் உள்ள சாலையில் கரடி உலா வந்தது. இதனை சிலர் செல் போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். பகல். இரவில் கரடி நடமாடி வருவதால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த பகுதிகளில் முறையாக தூய்மை பணி மேற்கொள்ளாததால், குப்பை தொட்டியில் உணவு கழிவுகள், அழுகிய பழங்களை கரடி உட்கொண்டு வருகிறது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகளை வனவிலங்குகள் உண்பதால், அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

SCROLL FOR NEXT