திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த துலுக்கமுத்தூர் ஊராட்சியில் கூட்டுறவு பால் கொள்முதல் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில், துலுக்கமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கத்தில், பால் கொள்முதலில் லட்சக்கணக்கில் முறைகேடு நடந்து இருப்பதாகவும், இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடந்த 2025-ம் ஆண்டு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து விசாரிக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி திருப்பூர் பால்வளத்துறை அதிகாரிகள் துலுக்கமுத்தூர் கூட்டுறவு பால் கொள்முதல் சங்கத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து விசாரணை அறிக்கை கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் கூட்டுறவு பால் கொள்முதல் சங்கத்துக்கு ரூ.21 லட்சத்து 91 ஆயிரம் நிதி இழப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதில் பதிவேடுகளில் முறைகேடாக பால் அளவுகளை வரவு வைத்த தன் பெயரில் ரூ.12 லட்சத்து 47 ஆயிரம், போலி அளவுகளை காட்டியதன் மூலம் ரூ.6லட்சத்து 79 ஆயிரம், மற்றும் உள்ளூர் பால் விற்பனையில் செய்யப்பட்ட முறைகேடுகளால் ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிதி இழப்புக்கு முன்னாள் செயலர் துரைசாமி, விரி வாக்க அலுவலர் அசோக்குமார், மற்றும் பால் பரிசோதகர் குப்புசாமி ஆகியோர்தான் காரணம் என்றும், இந்த 3 பேரும் தான், முழு பொறுப்பு என விசாரணை அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தார். இதற்கிடையில் பொதுமக்கள் கொடுத்த புகார் தொடர்பாக விசாரணையில் இருந்து தப்பிக்க கூட்டுறவு பால் சங்க, பால் பரிசோதகரின் உதவியாளர் ஜெயக்குமார் முறைகேடு ஆதாரங்களை அழிக்கும் விதமாக பேசிய ஆடியோ வெளியானது.
இதையடுத்து முன்னாள் செயலர் துரைசாமி, விரிவாக்க அலு வலர் அசோக்குமார், பால் பரிசோதகர் குப்புசாமி மற்றும் உதவியாளர் ஜெயக்குமார் ஆகிய 4 பேரையும் பணியிடைநீக்கம் செய்து, திருப்பூர் பால்வளத்துறை துணை பதிவாளர் சபரிநாதன் உத்தரவிட்டுள்ளார். இவர்களிடம் இருந்து நிதி இழப்பு தொகை ரூ.21 லட்சத்து 91 ஆயிரத்தை முழுமையாக வசூல் செய்ய 'தண்டவசூல்' மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என துணை பதி வாளர் தெரிவித்தார்.