தமிழக செய்திகள்

கூவம் தூர்வாரும் பணிகள் தொடக்க நிகழ்ச்சி: போக்குவரத்து நெரிசலால் பைக்கில் வந்த அமைச்சர் ஆனந்த்

ஆய்வு நடைபெறும் இடத்திற்கு வரும் வழியில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை,

சென்னை கோயம்பேடு அருகே பாடிகுப்பம் பகுதியில் நடைபெற்ற கூவம் தூர்வாரும் பணிகள் தொடக்க நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அமைச்சர் என். ஆனந்த் தவெக நிர்வாகி ஒருவரின் இருசக்கர வாகனத்தில் நிகழ்ச்சி இடத்துக்கு வந்தார்.

சென்னை கோயம்பேடு அருகில் உள்ள பாடிகுப்பம் கூவம் பகுதியில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகளை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் கள ஆய்வு செய்து தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று காலையில் நடைபெற இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் அமைச்சர் வந்து கொண்டிருந்தார்.

அமைச்சர் ஆனந்த் கள ஆய்வு

ஆய்வு நடைபெறும் இடத்திற்கு வரும் வழியில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காரில் சென்றால் காலதாமதம் ஏற்படும் என்பதால், அமைச்சர் என்ற ஆடம்பரத்தை விடுத்து உடனடியாக தவெக நிர்வாகி ஒருவரின் இருசக்கர வாகனத்தில் (பைக்) நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வேகமாக வந்து சேர்ந்தார். அமைச்சர் ஆனந்த் காரைத் தவிர்த்து பைக்கில் வந்து பணிகளைத் தொடங்கி வைத்ததுடன், கூவம் ஆற்றுப் பகுதியில் களமிறங்கி பணிகளின் நிலவரத்தையும் ஆய்வு செய்தார்.