தமிழக செய்திகள்

இந்தியா திரும்பும் செப்பேடுகள்; தமிழர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி - ராமதாஸ்

தமிழர் வரலாற்றை அறிந்து பெருமை கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

சோழர் காலத்தைச் சேர்ந்த அரிய செப்பேடுகள் விரைவில் இந்தியா திரும்பவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.

ஆனைமங்கலம் செப்பேடுகள்

நெதர்லாந்தில் பாதுகாக்கப்பட்டு வந்த ஆனைமங்கலம் செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது, தமிழர் வரலாறு மற்றும் பண்பாட்டு மரபுகளை மீட்டெடுக்கும் முக்கியமான நடவடிக்கையாகும். சோழர்களின் கடல் வாணிபம், நிர்வாகத் திறன், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுச் செய்திகள் இந்த செப்பேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழர் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் இந்த அரிய வரலாற்றுச் சின்னங்களை மீட்டெடுக்க நடவடிக்கை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீட்க வேண்டும்

மேலும், வெளிநாடுகளில் உள்ள தமிழர் வரலாற்று மற்றும் பண்பாட்டு சின்னங்கள் அனைத்தையும் கண்டறிந்து தாயகத்திற்கு மீட்டுக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மீட்கப்பட்டுள்ள செப்பேடுகள் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட்டு, வருங்கால தலைமுறைகள் தமிழர் வரலாற்றை அறிந்து பெருமை கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

தமிழர் நாகரிகத்தின் மகத்துவத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் இந்த முயற்சி மேலும் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.