தமிழக செய்திகள்

விஜயநகர காலத்து அரிய சிலைகள் பறிமுதல் - 4 பேர் கைது

தஞ்சாவூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் வாகன சோதனை நடத்தப்பட்டது.

சென்னை,

தமிழக காவல்துறையின் சிலைத் தடுப்புப் பிரிவு (Idol Wing CID) அதிகாரிகள், விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் 2 அரிய பழமையான உலோக சிலைகளை பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 6-ம் தேதி இரவு திடீர் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது வளையப்பேட்டை அருகே சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த காரை சோதனை செய்ததில், சணல் மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த விஷ்ணு மற்றும் தேவியின் சிலைகள் மீட்கப்பட்டன.

உரிய ஆவணங்களை காட்டாததால் காரில் இருந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி. மணிகண்டன் (41), கே. ராமச்சந்திரன் (41) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், இச்சிலைகளை அதிக விலையில் வெளிநாடுகளுக்கு கடத்தத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வி. முகிலன் (36), எஸ். ஜான்சன் (41) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT