தமிழக செய்திகள்

கொரோனா பாதிப்பு; தனிமைப்படுத்தி கொண்ட நபர்களை சந்தித்த அமைச்சர்

கொரோனா பாதித்து தனிமைப்படுத்தி கொண்டவர்களை தமிழக அமைச்சர் சந்தித்து உடல்நிலை பற்றி கேட்டறிந்து உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கோடம்பாக்கம் மண்டலத்தில், சமுதாய கூடத்தில் செயல்படும் கொரோனா உடற்பரிசோதனை மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதில் அமைச்சருடன், சென்னை மாநகரட்சி கமிஷனர் ககன்தீப் சீங் பேடி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை கோடம்பாக்கம் மண்டலத்தில், அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்துள்ளார்.

இதன்பின், 139வது வார்டு, வடிவேல் பிரதான சாலையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் செயல்படும் கொரோனா தொற்று முதற்கட்ட உடற்பயிற்சி மையத்திலும் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து, 128வது வார்டு வேம்புலியம்மன் கோவில் தெருவில் உள்ள, தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை சந்தித்து, அவர்களிடம் உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்துள்ளார்.