வேலூர்,
வேலூர்-ஆற்காடு சாலையில் சி.எம்.சி. என்ற தனியார் ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இங்குள்ள கொரோனா சிறப்பு வார்டில் தமிழகம் மட்டுமின்றி பிறமாநிலங்களை சேர்ந்த பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து, அவர்களின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா சிறப்பு வார்டில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் சிலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறி காணப்பட்டது.
200 பேருக்கு கொரோனா
அவர்களுக்கு அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த 10 நாட்களாக நடந்த பரிசோதனையில் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என்று 200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கும் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், தனியார் ஆஸ்பத்திரியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். அங்கு பணிபுரியும் நபர்களுக்கு தொற்று அறிகுறி காணப்பட்டதால் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் ஆஸ்பத்திரியில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த 10 நாட்களில் தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என்று 200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எனவே அங்கு பணிபுரியும் அனைவருக்கும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.