நீலகிரி,
மலைமாவட்டமான நீலகிரி இயற்கை அழகுடன் காட்சி அளிப்பதால், இங்கு தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மொழி சினிமா படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
அதன்படி நீலகிரி மாவட்டத்தில் அரசு தெரிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி படப்பிடிப்புக்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, சினிமா படப்பிடிப்புக்காக நீலகிரி வரும் குழுவினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று பாதிப்பு இல்லை என்று சான்றை கொண்டு வரவேண்டும்.
இந்த சான்று சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் சமர்ப்பித்து, படப்பிடிப்புக்கான அனுமதி பெற வேண்டும். படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தொற்று பாதிப்பில்லை என்ற சான்று கட்டாயம் என்றார்.