ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வர இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்தது. சமீபத்தில் இ-பாஸ் ரத்து செய்யப்பட்டு, இ-பதிவு நடைமுறையில் வர அனுமதிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
ஊரடங்கில் தளர்வு காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு அதிகம் பேர் வருகின்றனர். இதையொட்டி கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் இ-பதிவு, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் ஆகியவற்றை சரிபார்த்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். உள்ளூர் மக்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பினாலும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம். கேரளாவில் ஜிகா வைரஸ் பரவி வருகிறது. இந்த மாநிலத்தை ஒட்டி உள்ள நீலகிரியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.