தமிழக செய்திகள்

கொரோனா நிவாரண நிதியாக ஒரு மாத ஊதியத்தை வழங்கிய தனியார் நிறுவன காவலாளி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து நன்றி தெரிவித்தார்

கொரோனா நிவாரண நிதியாக ஒரு மாத ஊதியத்தை வழங்கிய தனியார் நிறுவன காவலாளி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து நன்றி தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவீர் என்று முதல்-அமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், சென்னை சாலி கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரவு காவலராக பணிபுரிந்து வரும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தங்கதுரை (வயது 59) என்பவர் தனது ஒரு மாத சம்பளத்தை வழங்க முன்வந்தார்.

பொது போக்குவரத்து தற்போது இல்லாத சூழ்நிலையில் அவர் மிதிவண்டியில் வந்து, முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து வழங்க முயற்சித்தார். அப்போது, முதல்-அமைச்சரின் அலுவல் பணி காரணமாக அவரை நேரில் சந்தித்து வழங்க இயல முடியாமல் போனது.

இதையடுத்து அவர் தன்னுடைய ஒரு மாத ஊதியமான ரூ.10 ஆயிரத்து 101-ஐ அரசு கணக்கில் சேர்த்துள்ளார். இதனை அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தங்கதுரையை நேரில் அழைத்து, கொரோனா நிவாரண பணிகளுக்காக நிதி வழங்கியதற்காக தனது நன்றியை தெரிவித்ததோடு, அவருக்கு தனது அன்பு பரிசாக புத்தகம் ஒன்றையும் வழங்கினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.