சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன் கண்ணகி நகர் நகர்ப்புற சமுதாய சுகாதார மையத்தில் மருத்துவர்கள் வருகை மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் தொடர்பாக, இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இன்று (11.06.2026) மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் சோழிங்கநல்லூர் மண்டலம், கண்ணகி நகர், நகர்ப்புற சமுதாய சுகாதார மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது, பணியில் இருந்த மருத்துவர்கள் விவரங்களைக் கேட்டறிந்து வருகைப்பதிவேட்டுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருத்துவ வசதிகள், மருந்துகள் இருப்பு உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்து ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையினை வழங்கிடவும், மருத்துவமனை வளாகங்களை தூய்மையாகப் பராமரித்திடவும், மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.