தமிழக செய்திகள்

கொடுங்கையூர் குப்பை கிடங்கில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்

தீ விபத்தின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆணையர் அறிவுரைகள் வழங்கினார்.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

இன்று (07.06.2026) பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன், தண்டையார்பேட்டை மண்டலம், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் திடீர் தீ விபத்தின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய தீயணைப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

அலுவலர்களுக்கு அறிவுரை

இதனனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர், கொடுங்கையூர் தீயணைப்பு நிலையத்திற்கு வருகை தந்து, கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் திடீர் தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மாநகராட்சி மற்றும் தீயணைப்புத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டிய தீயணைப்பு மற்றும் மீட்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார் .

புனரமைத்தல் பணிகள்

இதன் தொடர்ச்சியாக, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-46க்குட்பட்ட ரெயில்வே குட் ஷெட் சாலையில் உள்ள ரெயில்வே குளத்தில் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் தூர்வாரி புனரமைத்தல் பணிகள் மற்றும் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை மழைக்காலத்திற்கு முன்னதாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின்போது, மண்டல அலுவலர் ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி, தீயணைப்புத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.