தமிழக செய்திகள்

"த.வெ.க. ஆட்சியில் ஊழல் குறைந்துள்ளது"- ஜி.கே.வாசன் பாராட்டு

தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளையும் ஆட்சியாளர்கள் நிறைவேற்றத் தொடங்கியுள்ளனர் என்று ஜிகே வாசன் கூறினார்.

சென்னை,

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா தலைமை அலுவலகத்தில், 60 ஆண்டுகளுக்குப்பின் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் குறித்து நேற்று சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.துணை தலைவர் விடியல் சேகர், அமைப்பு செயலாளர் சாதிக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கொள்கை பரப்பு செயலாளர்கள் ஜெ.லூயிஸ்ராஜன், கே.ஆர்.டி.ரமேஷ், மாவட்ட தலைவர்கள் மால்மருகன், ஆர்.கே.நகர் மாரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:- கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழகத்தை திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி புரிந்துள்ளன. இத்தனை ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கான 'பொதுநலனை' விட 'சுயநலமே' மேலோங்கி நின்றது. தற்போது த.வெ.க. ஆட்சியில் ஊழல் குறையத் தொடங்கியுள்ளது. போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளையும் ஆட்சியாளர்கள் நிறைவேற்றத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து த.மா.கா. வலியுறுத்தும். த.வெ.க. அரசின் நல்முயற்சிகளுக்கு த.மா.கா. என்றும் ஆதரவு அளிக்கும். மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் ஆட்சியாளர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் பாலமாக தொடர்ந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT