கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய்யின் புகைப்படம் வாங்கியதில் ஊழல்: மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த அதிரடி உத்தரவு

புகைப்படத்துக்கு சந்தை மதிப்பை விட கூடுதலாக தொகையை குறிப்பிட்டு முறைகேடு செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கவுரி, "கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர், அந்தந்த பகுதிகளில் அதிகாரிகளை நியமித்து புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார். மேலும், புகைப்படங்கள் வாங்கப்பட்டதற்கான செலவு குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.மதுரை,

கூட்டுறவு சங்க அலுவலகங்களில் முதல்-அமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை ரூ.800-க்கு வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், புகைப்படங்கள் வாங்கப்பட்டதற்கான செலவு குறித்து விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு பொது விநியோகத் திட்ட ஊழியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் பால்ராஜ், ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:-

திண்டுக்கல் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளராக ராகவ் பாலாஜி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பொறுப்பேற்றதில் இருந்தே, கூட்டுறவு சங்கங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.

ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடாத அலுவலர்களையும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களையும் மிரட்டி மாதந்தோறும் கமிஷன் பெற்று வருகிறார். தற்போது ஒவ்வொரு கூட்டுறவு கடைகளிலும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் புகைப்படம் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்துக்கு சந்தை மதிப்பை விட கூடுதலாக தொகையை குறிப்பிட்டு முறைகேடுகளை செய்து வருகிறார்.

இந்த ஊழல் குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தலைமையில் விசாரணை நடத்தக் கோரி மனு அளித்தேன். அந்த மனுவை நாங்கள் புகார் கொடுத்த அதிகாரியின் கீழ் பணியாற்றும் அதிகாரி விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு உயரதிகாரி மீது குற்றச்சாட்டுகளை வைத்தால், அவருக்கு கீழ் பணிபுரியும் ஒரு அலுவலரை விசாரணை செய்ய உத்தரவிட்டால், அந்த விசாரணை எவ்வாறு முறையாக இருக்கும்? எனவே, கூட்டுறவுத்துறை செயலர் அல்லது கூட்டுறவு சங்கத்தின் தலைமை பதிவாளர் தலைமையில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கவுரி, "கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர், அந்தந்த பகுதிகளில் அதிகாரிகளை நியமித்து புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார். மேலும், புகைப்படங்கள் வாங்கப்பட்டதற்கான செலவு குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.