தமிழக செய்திகள்

போலி அமெரிக்க டாலரை இந்திய ரூபாயாக மாற்றி மோசடி - நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் கைது

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வு, மருத்துவ செலவுக்காக அவசரமாக அசோக்குமாரை அணுகி உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

ஈரோடு மாவட்டம் தேவம்பாளையத்தை சேர்ந்தவர் அசோக்குமார். டிராவல்ஸ் தொழிலில் அனுபவம் உள்ள இவர், வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு, அவர்கள் நாட்டு பணத்திற்கு மாற்றாக, இந்திய ரூபாய்களை மாற்றித் தரும் பணியைச் செய்து வருகிறார். இது தொடர்பாக இணையதளங்களில் விளம்பரமும் செய்துள்ளார்.

இந்நிலையில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வு என்பவர், அசோக்குமாரை அணுகி, தான் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி ஜவுளி தொழில் செய்து வருவதாகவும், மருத்துவ சிகிச்சைக்காக அவசரமாக 500 அமெரிக்க டாலருக்கு மாற்றாக, இந்திய ரூபாய்களை வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஈரோடு வந்த நைஜீரிய நபர், அசோக்குமாரிடம் 500 அமெரிக்க டாலரைக் கொடுத்து விட்டு, அதற்கு மாற்றாக, இந்திய மதிப்பில் ரூ. 48 ஆயிரம் பெற்றுள்ளார். நைஜீரியா நபர் கொடுத்த டாலரை, அசோக்குமார் ஆய்வு செய்த போது, அது போலி எனத் தெரியவந்தது.

இதையடுத்து ஈரோடு எஸ்.பி. ஜவகரிடம், அசோக்குமார் புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வுவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் போலி டாலர் கொடுத்து மோசடி செய்தது உறுதியானது.

கோவை காட்டூர் பகுதியில், இதே போல் போலி கரன்ஸி கொடுத்து மோசடி செய்தது தொடர்பாக, இவர் மீது ஒரு வழக்கு உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, நைஜீரியா நபரை, ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து நாதன் இகேச்சுக்வுவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது