சிவகங்கை,
தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாக நாட்டு வைத்தியர் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகிய 2 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை அருகே ஆத்திகாடு பகுதியை சேர்ந்தவர் நெடுஞ்செழியன் (வயது 45). இவர் சிங்கம் புணரியில் புத்தூர்கட்டு பாண்டி என்ற பெயரில் எலும்பு முறிவு, முடக்குவாதம், நரம்பு தளர்ச்சிக்கு நாட்டு வைத்திய சிகிச்சை அளித்து வந்தார். யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமடைந்தவர்.
இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் இவரிடம் முறையாக கல்விச்சான்று இல்லை என்று மருத்துவத்துறை இணை இயக்குனர் கொடுத்த புகாரின் பேரில் சிங்கம்புணரி போலீசார் விசாரணை நடத்தி நெடுஞ்செழியனை கைது செய்தனர். மேலும் அவரின் மருத்துவமனைக்கும் 'சீல்' வைத்தனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த அவர், தனது தோப்பில் செம்புவேல் முருகன் என்ற பெயரில் கோவில் கட்டி, அங்கு சிகிச்சை அளித்து வந்தார்.
இந்தநிலையில், நெடுஞ்செழியன் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தற்போது சிங்கம் புணரி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சீனிபாபு என்பவர் தனக்கு மாதந்தோறும் பணம் தரவேண்டும் என்று தொல்லை கொடுக்கிறார். இல்லையென்றால் பொய் வழக்குப்பதிந்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.
மேலும், சிங்கம்புணரி போலீஸ் நிலையத்தில் முன்பு பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் ஒருவரின் பெயரைகூறி போலீஸ் ஏட்டு ஒருவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தன்னிடம் பணம் பெற்றது தொடர்பான காட்சியையும் வெளியிட்டார். விசாரணையின் அடிப்படையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு மற்றும் ஏட்டு ஜெயராஜ் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி. மணிவண்ணன் உத்தரவிட்டார்.