தமிழக செய்திகள்

மணல் குவாரி திறக்கக்கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்

மணல் குவாரி திறக்கக்கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம்,

மாட்டுவண்டி மணல் குவாரியை திறக்கக்கோரி ஜனநாயக மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஊர்வலமாக சென்று விருத்தாசலம் சப்-கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கி மணல் குவாரி திறக்க வேண்டும், தமிழகம் முழுவதும் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகளை நிபந்தனையின்றி விடுவிக்க செய்ய வேண்டும், மாட்டு வண்டி தொழிலாளர் மீது பதிவு செய்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமையில் விருத்தாசலம் பாலக்கரையில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் கைகளில் கொடிகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் சப்-கலெக்டர் பழனியை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனை ஏற்ற மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT