தூத்துக்குடி,
தூத்துக்குடி சிவந்தாகுளம் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடை முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது.
தூத்துக்குடி சிவந்தாகுளம் 5-வது தெருவில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையால், அப்பகுதியில் சென்று வரும் பள்ளி மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தொடர்ச்சியாக பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதால், அந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டாஸ்மாக் கடை முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி நகரக் குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் முத்து கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அர்ச்சுனன், ராஜா, மூத்த நிர்வாகிகள் பொன்ராஜ், மணவாளன் உள்ளிட்ட திரளான கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினர்.
போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது, இந்த பிரச்சினை தொடர்பாக வரும் 27-ம் தேதி உதவி கலெக்டர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தி, உரிய தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதிகாரிகளின் இந்த உறுதியை ஏற்றுக்கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களது காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.