சென்னை,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதற்காக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும், தவெக அரசமைக்க ஆதரவு தெரிவித்ததோடு, அமைச்சரவையிலும் பங்கேற்றுள்ளன.
இது இன்றைய தமிழக அரசியல் சூழலில், அக்கட்சிகள் எடுத்த முடிவாகும். இத்தகைய அரசியல் முடிவை எடுக்க ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் உரிமை உண்டு.
அந்த உரிமையை மதிக்காமல், அங்கீகரிக்காமல், திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில், விசிகவையும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கையும், ஆபாசமொழியில் விமர்சித்து இருப்பதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்.
அரசியலில் கருத்து வேறுபாடுகளும், அரசியல் நிலைபாடுகளிலும் மாறுபாடுகள் வரும் பொழுது, நாகரீகமான முறையில் கருத்துகளை தெரிவிப்பதே உயரிய ஜனநாயகப் பண்பாகும்.
அத்தகையப் பண்பை ஆ.ராசா கடைபிடிக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.