மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான அய்யனார் குளம் உள்ளது. சுமார் 2 ஏக்கரில் அமைந்துள்ள இந்த குளம் கிராமத்தில் நிலத்தடி நீரை பாதுகாத்து வைப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு குடிநீருக்காகவும், குளிக்க வைப்பதற்காகவும் இந்த குளம் பயன்பட்டு வருகிறது. மேலும் கிராம மக்களும் இந்த குளத்தில் குளித்து வருகின்றனர்.
இந்த குளத்தில் கடந்த ஒரு ஆண்டாக ஒரு முதலை சுற்றித்திரிந்து வருகிறது. குளத்தின் கரை பகுதியில் வரும் ஆடு, கோழிகளை இந்த முதலை வேட்டையாடி வருகிறது. இதுவரை 6 ஆடுகளையும், 20-க்கும் மேற்பட்ட கோழிகளையும் பிடித்து தின்றுள்ளது.
இரவு நேரத்தில் முதலை சாலை ஓரம் உள்ள நெட்டகுளத்தில் இறங்கி விடுகிறது. அதிகாலையில் மீண்டும் அய்யனார் குளத்திற்கு வந்து கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடு, கோழிகளை பிடித்து தின்று விடுகிறது. இதனால் குளத்தில் குளிப்பதற்கு அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆடு, மாடுகளை குளத்தில் குளிப்பாட்டுவதையும் தவிர்த்து வருகின்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சீர்காழி வனத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் தொடர்ந்து முகாமிட்டு முதலையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். ஆனால் அவர்கள் கண்களில் முதலை படவில்லை.
இந்த நிலையில் நேற்று அய்யனார் குளத்தின் கரையில் முதலை படுத்திருந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி வனத்துறையினர் மீண்டும் முதலையை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதலையை பிடித்து அப்புறப்படுத்தினால் தான் இங்கு உள்ளவர்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.