சென்னை,
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
மேற்கு ஆசியாவில் போர் சூழ்நிலை காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 138 அமெரிக்க டாலராக இருந்தது. அப்போது தலைநகர் டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு 94.77 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு 87.67 ரூபாயாகவும் இருந்தது. இப்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 70.71 அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. இவ்வாறு இருக்கும் நிலையில் இன்று தலைநகர் டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு 102.12 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 95.20 ரூபாய்க்கும் விற்கிறது.
இது மட்டுமின்றி பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த போது வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர் விலையை இரண்டரை மடங்குக்கு மேல் உயர்ந்தது. இப்போது நிலைமை சீரான நிலையில் விலை குறைப்பு பற்றி எவ்வித அறிவிப்பும் இல்லாதது மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதுடன் எல்பிஜி வணிகப் பயன்பாடு மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் சிலிண்டர் விலையையும் உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.