தமிழக செய்திகள்

2-வதும் பெண்ணாக பிறந்ததால் பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர பாட்டி கைது

சில மணி நேரத்தில் பச்சிளம் குழந்தை திடீரென உயிரிழந்ததால் சந்தேகம் அடைந்த டாக்டர் பவானி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

பவானி,

பவானியில் பிறந்த பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர பாட்டியை போலீசார் கைது செய்தனர்.

பெண் குழந்தை

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொத்தபாளையம் செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மனைவி பிரியதர்ஷினி (வயது 25). இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பிரியதர்ஷனி 2-வது முறையாக கர்ப்பம் ஆனார். கடந்த 17-ந்தேதி பிரியதர்ஷினிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பிரியதர்ஷினியை அவரது தாய் தங்கமணி (47) ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு 18-ந்தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே எந்த அசைவும் இன்றி பேச்சுமூச்சின்றி கிடப்பதாக டாக்டரிடம் தங்கமணி கூறி உள்ளார்.

பிரேத பரிசோதனை

இதைத்தொடர்ந்து டாக்டர் குழந்தையை பரிசோதித்துள்ளார். அப்போது குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது. சில மணி நேரத்தில் பச்சிளம் குழந்தை திடீரென உயிரிழந்ததால் சந்தேகம் அடைந்த டாக்டர் இதுகுறித்து பவானி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்துவிட்டதாக தங்கமணி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் தங்கமணி முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசாருக்கு சந்தேகம் வந்தது. இதனால் குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை

இதுகுறித்து மர்ம சாவு என்று வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் வெளிவந்தது. அதில், கழுத்தை நெரித்து பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொ டர்ந்து தங்கமணியை பிடித்து போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். போலீசாரிடம் தங்கமணி அளித்த பரபரப்பு வாக்குமூலம் விவரம் வருமாறு:-

மகள் கஷ்டப்படுவாள்

எனது மகளுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. மகளின் கணவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தாள். இதனால் எனது மகளுக்கு 2-வதாக ஆண் குழந்தை பிறக்கும் என்று நம்பியிருந்தேன். ஆனால் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. 2 பெண் குழந்தைகளை வளர்க்க மகள் கஷ்டப்படுவாள் என்பதற்காக பிறந்த சில மணி நேரத்தில் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தங்கமணியை நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.