தமிழக செய்திகள்

கடலூர் ரயில் விபத்து: பொறுப்பற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை- நெல்லை முபாரக் வலியுறுத்தல்

கடலூர் ரயில் விபத்தில் தங்களது பிள்ளைகளை இழந்து மீளாத்துயரில் தவிக்கும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த செய்தி ஆழ்ந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. இவ்விபத்திற்கு கேட் கீப்பரின் பணி அலட்சியமும், வேன் ஓட்டுநரின் அஜாக்கிரதையும் முதன்மைக் காரணங்களாக அமைந்துள்ளன. இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்க, பொறுப்பற்றவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்த விபத்தில் தங்களது பிள்ளைகளை இழந்து மீளாத்துயரில் தவிக்கும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

SCROLL FOR NEXT