சென்னை,
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளன. இதில், வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் அடுத்து உயர்கல்வி படிப்புக்கு செல்ல வேண்டும். உயர்கல்வியில், என்ஜினீயரிங், வேளாண்மை, கால்நடை மருத்துவம் மற்றும் மீன்வளப் படிப்புகளுக்கு 'கட் ஆப்' மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
கடந்த ஆண்டுடன் (2024-25) ஒப்பிடும்போது, இந்த ஆண்டு (2025-26) மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் குறைந்துள்ளது. இதனால், என்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்புகளுக்கான 'கட் ஆப்' மதிப்பெண்கள் இந்த ஆண்டு குறைய வாய்ப்பு இருக்கிறது.
உதாரணத்திற்கு, இந்த ஆண்டு இயற்பியல் பாடத்தில் 105 பேர் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். ஆனால், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 1,125 ஆக இருந்தது. அதேபோல், வேதியியல் பாடத்தில் 632 பேரும், உயிரியல் பாடத்தில் 784 பேரும், கணிதத்தில் 732 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு வேதியியலில் 3,181 பேரும், உயிரியலில் 827 பேரும், கணிதத்தில் 3,022 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.
100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்தவர்களின் எண்ணிக்கையே இவ்வாறு குறையும்போது, அதற்கு கீழ் மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கையும் கண்டிப்பாக குறையவே வாய்ப்பு இருக்கிறது. இதனால், இந்த ஆண்டு (2026-27) என்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்புகளுக்கு 'கட் ஆப்' மதிப்பெண்கள் குறையவே வாய்ப்பு இருக்கிறது.