தேமுதிக பொதுச்செயலாளரும் விருதாசலம் தொகுதி எம்.எல்.ஏவுமான பிரேமலதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: - ``எனக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த தொகுதி மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சட்டமன்றத்தில் ரத்தன் பண்டிட் விவகாரம் தொடர்பாகத் நான் எழுப்பிய கேள்விக்கு, அடுத்த சில நிமிடங்களிலேயே அரசு நடவடிக்கை எடுத்ததை வரவேற்கிறேன். அத்துடன், தமிழக மக்களின் நலனுக்காக அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்களை தே.மு.தி.க எப்போதும் ஆதரிக்கும்.
அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து வந்தவர்கள் தற்போதைய ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்தால் அதனை வரவேற்கலாம். அவ்வாறு இல்லாமல், திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் நடந்தால் அது தமிழகம் இதுவரை கண்டிராத 'குதிரை பேரத்திற்கு' வழிவகுத்துவிடும். இது குறித்து முதலமைச்சர் வெளிப்படையான அறிவிப்பை வெளியிட வேண்டும். இளைஞர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணத்தை இந்த அரசு ஏற்படுத்திவிடக் கூடாது. நாடாளுமன்றத் தேர்தலின் போது தேமுதிகவுக்கு 5 மக்களவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் தருவதாக அ.தி.மு.க தரப்பில் கையெழுத்திட்டுக் கொடுக்கப்பட்டது உண்மைதான்.
எம்பி இடங்களை எடப்பாடி பழனிசாமி தர மறுத்தார் என்று சி.வி.சண்முகம் கூறியுள்ள குற்றச்சாட்டு நூற்றுக்கு நூறு உண்மை. ஒப்பந்தம் செய்துவிட்டு, பின்னர் 'யார் யாரோ சொல்வதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது' என்று எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் யாருக்குமே உகந்ததாக இல்லை. இதையேதான் சி.வி.சண்முகமும் சுட்டிக்காட்டினார்” இவ்வாறு அவர் கூறினார்.