மதுரை,
ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு முன்னுரிமை அளித்தும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டருக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் வணிக பயன்பட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டு சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டதால் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்படுமோ என்கிற பீதி பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
ஆனால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என்று மக்கள் பீதி அடைய வேண்டம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் சிலிண்டர்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், மதுரை கோவில்பாப்பாகுடி பகுதியை சேர்ந்த பழனி என்பவர் வீட்டருகே 100 சமையல் எரிவாயு சிலிண்டர்கள், 109 வணிக சிலிண்டர்கள் மற்றும் மதன்குமார் என்பவர் வீட்டருகே 63 சமையல் எரிவாயு சிலிண்டர்கள், 126 வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, சிலிண்டர்களை பதுக்கிய பழனி மற்றும் மதன்குமார் ஆகிய 2 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.